by : HASSAN
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் மலைப்பாங்கான பிரதேசங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக யாழ். மாவட்ட மீனவர்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் கடல் நீரில் அள்ளுண்டு சென்றுள்ளன.
சீரற்ற வானிலையால் மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக தொழிலுக்கு செல்லவியலாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, கரவெட்டி மற்றும் இன்பருட்டி பகுதிகளில் நேற்று வீசிய மினி சூறாவளியால் வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக கனகாம்பிகை குளம் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இரணைமடு குளத்திற்கு செல்லும் பிரதான வீதியின் பாலம் உடைந்துள்ள நிலையில், பிரதேச மக்கள் மாற்று வீதியினைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் ஏ-32 வீதி நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் பாதி்க்கப்பட்டுள்ளது.
தொடரும் மழையினால் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுள்ளது.
இதேவேளை, வவுனியா – மடு, பண்டிவிரிச்சான் பிரதான வீதி தொடர்ந்தும் நீரிழ் மூழ்கிக் காணப்படுகின்றது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்தின் போது மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிண்ணியா, சம்பூர், சாம்பல் தீவு உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
தொடரும் மழையினால் கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதி மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கல்லாறு, மண்டூர், பட்டிருப்பு, கல்லடி போன்ற வாவிகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
போரைத்தீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காட்சியளிக்கின்றன.
இதேவேளை, அக்கரைப்பத்தன பகுதியில் லிந்துலை – டயகம பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் குறித்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
by : HASSAN
பிரதமருக்கான வாகனக் கொள்வனவு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவால் வௌியிடப்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்சைகள் பற்றி மக்களுக்கு உண்மை நிலையை தௌிவுபடுத்த தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்கவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் பிரதமர் அலுவலகத்தால் அவரது பயன்பாட்டுக்காக எந்தவொரு உத்தியோகபூர்வ வாகனமோ பாதுகாப்பு வாகனமோ வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட இரு பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் ஜூப் வண்டி ஒன்றையுமே, அவர் பயன்படுத்தி வந்தார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவையும் பழையவை, குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட விபரம் இல்லாமையால் அவற்றை பதிவு செய்யவோ பயன்படுத்தவோ முடியவில்லை, மேலும் அந்த வாகனங்களில் நிலையும் நன்றாக இல்லை, தினம் தினம் புனரமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, 2015ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதி முதல் புனரமைப்பு மற்றும் பராமரிப்புக்காக 9.8 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் ரணில் விக்ரமசிங்க பல சந்தர்ப்பங்களில் தனது சொந்த வாகனத்தையே பயன்படுத்தியுள்ளார், இதற்காக எந்தவொரு பணமும் வழங்கப்படவில்லை எனவும் சாகல ரத்நாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிரதமர் அலுவலகத்தால் உத்தியோகபூர்வ வாகனம் வழங்காமையால், புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதில் தவறில்லை எனவும் கூறியுள்ள அவர், பிரதமருக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு முன்வைத்துள்ள அறிக்கையின் பிரகாரம் முதல்கட்டமாக அவருக்கு பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி பாதுகாப்பு வாகனங்கள் இரண்டைக் கொள்வனவு செய்ய 128 மில்லியன் செலவாகும். ஏனைய 468 மில்லியன் ரூபாய் அரசாங்க வரிப் பணம். அவை அரசாங்கத்தின் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றப்படுபவை, உண்மையாக செலவிடப்படும் பணம் அல்ல எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
by : HASSAN
சேருநுவர பிரதேசத்தில் நீண்டகாலமாக பெண்ணொருவரை காதலித்து பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அதன் ஒளி நாடாவை பேஸ்புக்கில் (சமூக வலைத்தளத்தில்) தரவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை நேற்று மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை இளைஞர் பாடசாலைக் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளார். குறித்த பெண்ணை பல தடவைகள் பல இடங்களுக்கும் சென்று பாலியல் உறவு கொண்டுள்ளதுடன் அதை இரகசியமாக கைத்தொலைபேசியில் வீடியோ செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு வீட்டாருக்கும் பிணக்குகள் ஏற்பட்டவுடன் குறித்த இளைஞன் பாலியல் நாடாவை முகநூலில் தரவேற்றம் செய்துள்ளார். இதனை அறிந்த பெண் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
by : HASSAN
சீரற்ற காலநிலை காரணமாக பாராளுமன்ற கட்டிடத்தொகுதியை சுற்றியுள்ள குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பாதுகாப்பு படையினர் பாராளுமன்ற கட்டத்தொகுதியை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றியுள்ள குளத்தின் நீர்மட்டம் கட்டல் மட்டத்தில் இருந்து 1.3 மீட்டர் எனவும் அது 1.8 மீட்டர் வரை உயரும் பட்சத்தில் நீர் பாராளுமன்ற கட்டத்திற்குள் புகும் என தெரிவிக்கப்படுகிறது.



